அல்வா பூரி


அல்வா பூரி
x
தினத்தந்தி 19 Oct 2021 5:05 AM GMT (Updated: 19 Oct 2021 5:05 AM GMT)

இனிப்பான அல்வாவையும், சுவையான பூரியையும் ஒருங்கிணைத்து உணவு சமைக்கும் முறையை இந்த ரெசிபி விளக்குகிறது.

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 250 கிராம்
பாதாம் (ஊற வைத்தது) -50 கிராம்
தேங்காய்  - ½ மூடி (துருவியது)
கோவா - 100 கிராம்
பால் - 3 கப்
நெய்  -1 கப்
உலர்ந்த திராட்சை - 50 கிராம்
ஏலக்காய்த்  தூள் - ½ டீஸ்பூன்
சர்க்கரை - 350 கிராம்
மைதா - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கடலை பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி குழையும் வரை வேக வைக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஊற வைத்த பாதாமை விழுதாக தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் உலர்ந்த திராட்சையைப் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் அரைத்து வைத்திருந்த கடலை பருப்பு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். 

பின்பு அதில் துருவிய தேங்காய், பாதாம் விழுது, கோவா, பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்து, மிதமான தீயில் கிளறவும். பிறகு தீயை அணைத்து வறுத்து வைத்திருந்த திராட்சையை கலந்து ஆற விடவும். 

மைதாவை பாத்திரத்தில் கொட்டி, அதில் தேவையான அளவு உப்பு, 1 டேபிள் ஸ்பூன் நெய், ½ கப் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ½ மணி நேரம் ஊற வைக்கவும். 

பிறகு பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி, அதற்குள் கடலை பருப்பு அல்வாவை வைத்து மூடவும். ஓரங்களில் தண்ணீர் தடவி சோமாஸ் போல் மடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும், சூடான, சுவையான ‘அல்வா பூரி’ தயார். 

Next Story