தஞ்சை காமராஜர் மார்க்கெட் 7-ந்தேதியுடன் மூடப்படுகிறது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பால் பரபரப்பு


தஞ்சை காமராஜர் மார்க்கெட் 7-ந்தேதியுடன் மூடப்படுகிறது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 5:55 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி தொடங்கப்படுவதையடுத்து தஞ்சை காமராஜர் மார்க்கெட் வருகிற 7-ந்தேதியுடன் மூடப்படுகிறது. இங்குள்ள கடைகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு காணப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை அருகே உள்ளது காமராஜர் மார்க்கெட். இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.

இந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லரை விற்பனை கடைகள் 212-ம், தரைக்கடைகளும் உள்ளன. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு ரூ.904 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்கள் நிற்கும் இடம் ஆகியவை மூடப்பட்டு தற்காலிக பஸ் நிலையம் கரந்தை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேறு இடத்துக்கு மாற்றம்

இதே போல் சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்காவும் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து சரபோஜி மார்க்கெட் பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வருகிற 7-ந்தேதியுடன் காமராஜர் மார்க்கெட் மூடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் மார்க்கெட்டில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அதில், மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின்படி, காமராஜர் மார்க்கெட் வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள காவேரிநகரில் அமைந்துள்ள எஸ்.பி.சி.ஏ. மைதானத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதற்காக அங்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காமராஜர் மார்க்கெட் 8-ந்தேதி முதல் காவேரி நகரில் செயல்பட உள்ளதால், கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அங்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன”என்றனர்.

ரூ.17 கோடியில் பணிகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காமராஜர் மார்க்கெட் ரூ.17 கோடியில் புதிதாக 17 ஆயிரத்து 225 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படுகிறது. இங்கு 211 கடைகள் கட்டப்படுகின்றன. முதல் தளத்தில் அலுவலக கட்டிடம் 3-ம், கழிவறை வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

மேலும் இந்த மார்க்கெட்டில் 8 லாரிகள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 176 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகின்றன. இது தவிர குடிநீர் வசதி, ஏ.டி.எம். வசதி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வசதியும் இங்கு அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story