கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலைக்கு செல்ல தடை + "||" + Flooding on the way to the temple: Prohibited to go to Chaturagiri hill
கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலைக்கு செல்ல தடை
கோவிலுக்கு செல்லும் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நாட்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்தனர்.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பெய்த கனமழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கிலிப்பாறை ஓடையை கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், அவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் கோவிலுக்கு சென்ற 200-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர், ஓடைகளில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து பக்தர்களை மீட்புக்குழுவினர் பத்திரமாக கீழே அழைத்து வந்தனர்.
ஓடைகளில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பக்தர்களுக்கு கோவிலுக்குள் செல்ல தடைவிதித்து சிவகாசி உதவி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையே நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்தனர். பாதுகாப்பு கருதி அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பழனி கோவிலுக்கு பக்தர்கள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதலாக சுற்றுலா பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.