குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பீட் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்


குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பீட் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:30 PM GMT (Updated: 14 Dec 2019 8:23 PM GMT)

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பீட் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

காலாப்பட்டு, 

புதுவை பல்கலைக்கழகத்தில் நேற்று காலை போலீசாருக்கான கருத்தரங்கு நடந்தது. தலைமை செயலாளர் அஸ்வனி குமார் தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்வதா முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

கருத்தரங்கில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டு மக்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கவும், அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. புதுவை மாநிலத்தில் தற்போது பீட் போலீசாரின் எண்ணிக்கை 149ல் இருந்து 761 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுவை காவல்துறையின் முழுமையான செயல்பாடு பீட் போலீசார் செயல்பாட்டில்தான் உள்ளது.

போலீசார் ரோந்து செல்லும்போது, அங்கன்வாடி ஊழியர்கள், அந்த பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சங்கத்தினர், சுயஉதவிக்குழுவினர், குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். வாட்ஸ்-அப் மூலம் குற்றவாளிகள், குற்றங்கள் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈவ்டீசிங் போன்ற குற்றங்களை கண்காணிக்க வேண்டும்.

தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கையில் ஏதாவது மாற்றங்கள் தெரிவித்தால் உடனடியாக தங்களின் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் இடை நிற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் ரவுடிகளுடன் கைகோர்த்து விடக்கூடாது. இதனை பீட் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா பேசும் போது, ‘புதுவை காவல்துறையில் மின்னணு ரோந்து புத்தகம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பீட் போலீசாரின் பணிச்சுமை வெகுவாக குறையும்‘ என்றார்.

கருத்தரங்கில் கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ், பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங், போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், நிகரிகா பட், அகன்ஷா யாதவ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Next Story