பொள்ளாச்சி அருகே டிராக்டர் மீது கார் மோதல்; தேங்காய் வியாபாரி சாவு 7 பேர் படுகாயம்


பொள்ளாச்சி அருகே டிராக்டர் மீது கார் மோதல்; தேங்காய் வியாபாரி சாவு 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jan 2020 10:15 PM GMT (Updated: 12 Jan 2020 9:41 PM GMT)

பொள்ளாச்சி அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தேங்காய் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60), தேங்காய் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் ஆர்.பொன்னாபுரத்தில் இருந்து டிராக்டரில் தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு கிணத்துக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (50) என்பவர் உடன் இருந்தார்.

இந்த நிலையில் கோவை மெயின் ரோடு ஆச்சிபட்டி அருகே டிராக்டர் சென்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று டிராக்டரின் பின்னால் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் டிராக்டரில் இருந்து முத்துசாமி நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

7 பேர் படுகாயம்

இந்த விபத்தில், டிராக்டரில் வந்த சுப்பிரமணியம், மற்றும் காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த முத்துசேதுபதி (41), காரில் வந்த ஜாக்லின் (33) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதனைகண்ட அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது.

இதில், நான்குபேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேங்காய் வியாபாரி முத்துசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story