குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2020 9:29 PM GMT (Updated: 28 Jan 2020 9:29 PM GMT)

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

மும்பை,

டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 40 நாட்களுக்கு மேலாக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்ற போராட்டம் கடந்த 26-ந் தேதி இரவு மும்பை நாக்பாடா பகுதியில் உள்ள மோர்லேண்டு ரோட்டில் தொடங்கி உள்ளது.

இந்த போராட்டத்தில் அக்ரிபாடா, மதன்புரா, ஜூலா மைதான் மற்றும் மத்திய மும்பை பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாணவிகளும் பங்கேற்று உள்ளனர். இவர்கள் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்து- முஸ்லிம் சகோதரத்துவத்தை பற்றியும் கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் பின்வாங்காமல் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பெரோஷ் மித்திபோர்வாலா என்ற பெண் கூறுகையில், ‘‘இஸ்லாமிய பெண்கள் கடந்த 6 ஆண்டுகளாக மிகுந்த விரக்தியில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் இன்று வெளியே வந்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்’’ என்றார்.

நக்மா சித்திக் என்ற பெண் கூறும்போது, ‘‘போராட்டத்தில் ஈடுபட ஒன்று கூடுவது எங்களுக்கு திருவிழா போன்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பகுதியாக, பகுதியாக வீட்டுக்கு சென்று பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வருகின்றனர்’’ என்றார்.

பெண்கள் சாலையின் ஒரு பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனினும் போலீசார் பெண்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

Next Story