சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை


சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Jun 2020 1:36 AM GMT (Updated: 29 Jun 2020 1:36 AM GMT)

சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி வி.என்.எஸ். நகரை சேர்ந்தவர் சுதந்திரா (வயது78). டாக்டர். திருமணமாகாதவர். இவர் கொள்ளிடம் வட்டார மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுதந்திரா தனது வீட்டின் மாடிப்படி அருகே தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்தபடி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று டாக்டர் சுதந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக அவருடைய உறவினர் சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் படுகாயத்துடன் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story