நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆண்டுகளில் 1,450 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆண்டுகளில் 1,450 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை
x
தினத்தந்தி 23 Oct 2020 11:37 PM GMT (Updated: 23 Oct 2020 11:37 PM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 ஆண்டுகளில் 1,450 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை செய்து இருக்கிறோம் என டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

நெல்லை, 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த மாதத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான மார்பக புற்றுநோய் மாத நிகழ்ச்சி நெல்லை பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். புற்று நோய் பிரிவு தலைமை டாக்டர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் டீன் ரவிச்சந்திரன் பேசியதாவது:-

1,450 பெண்கள்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தனர். அதில் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம்.

உயர்தர நவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சிலர் தொடக்க நிலையில் வந்துவிட்டனர். ஒரு சில பெண்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது வந்தார்கள். இந்த மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் 4 நிலையாக பிரித்து சிகிச்சை கொடுக்கிறோம். ஹீமோதெரபி சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை என 3 வகையான சிகிச்சை முறை கையாளப்படுகிறது.

தொடக்க நிலையில்...

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடக்க நிலையிலேயே வந்தால் குணப்படுத்தலாம். அவர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள் கிராமப்புற மக்களுக்கு சரியாக தெரிவதில்லை. அதனால் தான் அவர்கள் நோய் முற்றிய பிறகு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அதை குணப்படுத்துவது சிரமம். அதனால் இதற்கான அறிகுறி தெரிந்தால் பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story