கன்னியாகுமரியில் துணிகரம்: முருகன்குன்றம் கோவிலில் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கன்னியாகுமரியில் துணிகரம்: முருகன்குன்றம் கோவிலில் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Oct 2020 6:30 AM GMT (Updated: 25 Oct 2020 6:30 AM GMT)

கன்னியாகுமரி முருகன்குன்றம் கோவிலில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி, 


கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள மலைக்குன்றில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கோவிலில் பூசாரியாக அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் பணியாற்றி வருகிறார். தினமும் இங்கு 3 வேளை பூஜை நடைபெறும். பூஜையை முடித்ததும் மூலஸ்தானத்தில் உள்ள முருகன் மற்றும் விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகளின் அறைகளை பூட்டி விட்டு, அதன் சாவிகளை மடப்பள்ளி அறையில் பூசாரி ராஜரத்தினம் வைப்பாராம். அந்த மடப்பள்ளி அறையை பூட்டி விட்டு அதன் சாவியை மட்டும் அவர் வீட்டுக்கு எடுத்து செல்வாராம். அதே சமயத்தில், கோவிலின் முன்புறம் உள்ள இரும்பு கிரில் ‘கேட்‘ மட்டும் பூட்டப்படும்.

இந்த நிலையில் நேற்று காலையில் பூசாரி ராஜரத்தினம் வழக்கம் போல் பூஜைக்கு சென்றார். கோவிலின் முன்பக்க இரும்பு கிரில் ‘கேட்‘டை திறந்து விட்டு உள்ளே சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கொள்ளை

அதாவது மடப்பள்ளி அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த சாவிகளை காணவில்லை. மேலும், கோவிலில் ஏராளமான பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மூலஸ்தான அறை உள்ளிட்ட அனைத்து சாமி அறைகளும் திறந்து கிடந்தன. உண்டியல் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

மேலும் நகை இருக்கும் அறையில் இருந்த அம்மன் நகை, அம்மன் தாலி, அம்மன் பொட்டுகள், தங்க காசு, சாமி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களும் திருடப்பட்டிருந்தன. பதற்றத்துடன் காணப்பட்ட பூசாரி ராஜரத்தினம், உடனே இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்ததோடு கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை

அப்போது, ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள், உண்டியல் பணம் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க வைத்திருந்த ரூ.6,500 மற்றும் 24 வகை பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கோவிலில் சாவி இருக்கும் இடம் பற்றிய விவரத்தை அறிந்த நபர்கள் தான், துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோவிலின் கீழ்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொள்ளை தொடர்பாக துப்பு துலக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். மலைக்குன்றில் வீற்றிருந்த முருகன் கோவிலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story