எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை - சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு


எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை - சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Nov 2020 10:15 PM GMT (Updated: 3 Nov 2020 8:41 PM GMT)

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில் ‘அழகிய தமிழ் மகன்’ பட தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஆலந்தூர், 

நடிகர் விஜய் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தை ஸ்வர்க்க சித்ரா என்ற தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சன் தயாரித்து இருந்தார்.

இந்த படத்தின் வெளியீட்டுக்காக விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 15 நாளில் திருப்பி தருவதாக கூறி ரூ.1 கோடியை அப்பச்சன் கடனாக பெற்றிருந்தார்.

இந்த பணத்தை திருப்பி கொடுக்கும் வகையில் அப்பச்சன் கொடுத்த காசோலை, வங்கி கணக்கில் பணமில்லாமல் 2 முறை திரும்பி வந்ததாக கூறி கடந்த 2008-ம் ஆண்டு தயாரிப்பாளர் அப்பச்சன் மீது சைதாப்பேட்டை பெருநகர விரைவு நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் காசோலை மோசடி வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், அப்பச்சனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கடனாக வாங்கிய ரூ.1 கோடியை அவருக்கு திரும்ப வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story