போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி


போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 9 July 2021 9:15 PM GMT (Updated: 9 July 2021 9:15 PM GMT)

பெரம்பலூரில் போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெரம்பலூர்:

அனுமதிக்கப்படாத நேரத்தில்...
பெரம்பலூர் நகரானது போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகும். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைந்துள்ள சாலை பகுதியில் வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளது. மேலும் அந்த சாலை வழியாகத்தான் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்லும்.
இதனால் அந்தப்பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும். மேலும் அந்தப்பகுதி மற்றும் கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படாத நேரத்தில் கனரக வாகனங்களை அந்த சாலையில் நிறுத்தி பொருட்களை இறக்கி வருவதால் தற்போது அந்தப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
வணிக நிறுவனங்களுக்கு செல்லும் நபர்களும் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி, போக்குவரத்துக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சாலையின் ஓரமாக பாதசாரிகள் செல்ல முடியாமலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பின்னால் வரும் பஸ்கள், கனரக வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு ஒதுங்க முடியாமலும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில சமயத்தில் இதனால் விபத்தும் ஏற்படுகிறது.
எனவே அந்தப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கனரக, சரக்கு வாகனங்களை நிறுத்தி வணிக நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையோரத்தில் தேவையில்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Next Story