கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 2 Nov 2021 12:13 AM GMT (Updated: 2 Nov 2021 12:13 AM GMT)

கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.

ஈரோடு
கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
மாமியார் மீது தாக்குதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நேருநகரை சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மனைவி கவுசல்யா (வயது 65). கண்ணையன் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு சங்கரன் (35), தனபால் (32) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சங்கரனின் மனைவி மலர்கொடிக்கும் (32), கவுசல்யாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கவுசல்யா கூடக்கரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கவுசல்யா தனது துணிகளை எடுப்பதற்காக நேருநகரில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த மலர்க்கொடி, கவுசல்யாவிடம் இந்த வீடு எனக்கு தான் சொந்தம் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மலர்கொடி கீழே கிடந்த கட்டையை எடுத்து தாக்கியதாகவும், காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கவுசல்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கவுசல்யா கொடுத்த புகாரின்பேரில் மலர்க்கொடி மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீக்குளிக்க முயற்சி
இந்தநிலையில் மலரக்்கொடி தனது 2 மகள்களுடன் நேற்று மதியம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர் நுழைவு வாயில் அருகில் அழுது கொண்டே புகார் மனு கொடுப்பதற்காக நின்றிருந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விரைந்து சென்று மலர்க்கொடியை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர், தனது கணவரும், மாமியாரும் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக மலர்க்கொடியிடம் போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story