மோசமான வானிலையால் சீரடி விமானம் ரத்து சென்னையில் பயணிகள் வாக்குவாதம்


மோசமான வானிலையால் சீரடி விமானம் ரத்து சென்னையில் பயணிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 Nov 2021 10:15 PM GMT (Updated: 26 Nov 2021 5:48 AM GMT)

மோசமான வானிலையால் சீரடி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சீரடிக்கு நேற்று மதியம் 2 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 190 பயணிகள், பயணம் செய்ய இருந்தனா். பயணிகள் 12.30 மணிக்கே சென்னை விமான நிலையம் வந்துவிட்டனர்.

ஆனால் சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாக புறப்படும் என்று தனியாா் விமான நிறுவன அதிகாரிகள் அறிவித்தனா். இதனால் பயணிகள், விமான நிலையத்தில் காத்திருந்தனா். சிறிது நேரத்தில் சீரடியில் வானிலை இன்னும் சரியாகவில்லை. எனவே விமானம் ரத்து செய்யப்படுகிறது. சீரடிக்கு நாளை(அதாவது இன்று) விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனா்.

இதை கேட்ட பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா். சீரடிக்கு செல்பவா்கள் 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும். நாளைக்கு பயணம் என்றால் ஏற்கனவே செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். மீண்டும் புதிய பரிசோதனை சான்றிதழ் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் விமான நிறுவனம், எங்கள் மீது தவறு எதுவும் இல்லை. மோசமான வானிலையால் விமானம் ரத்து செய்யப்பட்டது என்று கூறிவிட்டனா். வாக்குவாதம் செய்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இது போல் சீரடியில் இருந்து மாலை 6 மணிக்கு சென்னை வரவேண்டிய பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் சென்னை வர இருந்த 105 பயணிகளும் சீரடியில் தவித்து கொண்டிருக்கின்றனா்.

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து சீரடிக்கும், சீரடியில் இருந்து சென்னைக்கும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 295 பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

Next Story