உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே ஆன்மிக அரசியல் - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே மதசார்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.#RajiniMandram #Tamillatestnews
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எந்த விதமான பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மாவட்ட வாரியாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும், அரசியல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து வந்தார். தனது அரசியல் முடிவை 31-ந் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, 31-ந் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் மூட்டியது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அவரது அரசியல் நடவடிக்கை எவ்வாறு இருக்கும்? என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுக்கு, மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேற்று மாலை ரசிகர்கள் உடனான தனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கும் வகையில் www.rajinimandram.org என்ற பிரத்தியேக புதிய இணையதள பக்கத்தை ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்.
முன்னதாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் தன்னுடைய வீடியோ காட்சியை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு நிமிடம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர தான் இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே மதசார்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.மேலும்ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது.மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்குகின்றன என கூறினார்.
#RajiniMandram | #Rajinikanthpoliticalentry | #Rajinikanth | #Tamillatestnews
Related Tags :
Next Story