மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன - நடிகர் ரஜினிகாந்த்


மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன - நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 2 Jan 2018 12:18 PM GMT (Updated: 2 Jan 2018 12:26 PM GMT)

மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்குகின்றன என பத்திரிகையாளர்கள் உடனான பிரத்யேக சந்திப்பில் ரஜினிகாந்த் கூறினார். #RajiniMandram #Tamillatestnews

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எந்த விதமான பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மாவட்ட வாரியாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும், அரசியல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து வந்தார். தனது அரசியல் முடிவை 31-ந் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, 31-ந் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் மூட்டியது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அவரது அரசியல் நடவடிக்கை எவ்வாறு இருக்கும்? என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுக்கு, மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேற்று மாலை ரசிகர்கள் உடனான தனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கும் வகையில் www.rajinimandram.org என்ற  பிரத்தியேக புதிய இணையதள பக்கத்தை ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்.

முன்னதாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் தன்னுடைய வீடியோ காட்சியை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு நிமிடம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர தான் இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த்  உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே மதசார்பற்ற அறவழி  அரசியலே ஆன்மிக அரசியல் என  நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.மேலும்ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது என கூறினார்.

பத்திரிகையாளர்கள் உடனான பிரத்யேக சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன.  நானும் பத்திரிகையில் பணிபுரிந்துள்ளேன்

அரசியல் குறித்த அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் இரண்டு மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணி செய்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டி அளித்தேன். நம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. என்னுடைய அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை

கட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கட்சிகொடியை அறிமுகம் செய்யும் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



#RajiniMandram | #Rajinikanthpoliticalentry | #Rajinikanth  | #Tamillatestnews

Next Story