போதைப்பொருள் - பாலிவுட் இளம் நடிகையிடம் விசாரணை


போதைப்பொருள் - பாலிவுட் இளம் நடிகையிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2021 11:18 AM GMT (Updated: 21 Oct 2021 11:18 AM GMT)

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக நடிகை அனன்யா பாண்டேவிடம் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலில் சென்றனர்.அப்போது, தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர், ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.

இந்தநிலையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அனன்யா பாண்டேவிற்கு சம்மன் அனுப்பினர்.  சம்மன் அனுப்பியதை அடுத்து அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜரானார். 

இதனிடையே,  போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.அதேபோல், நடிகை அனன்யா பாண்டே வீடும் சோதனைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Next Story