கர்ப்ப காலம் குறித்து நடிகை கரீனா கபூர் எழுதிய புத்தக தலைப்புக்கு எதிர்ப்பு


கர்ப்ப காலம் குறித்து நடிகை கரீனா கபூர் எழுதிய புத்தக தலைப்புக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 July 2021 8:05 AM GMT (Updated: 15 July 2021 12:36 PM GMT)

கரீனா கபூர் எழுதிய புத்தகத்திற்கு வைத்திருக்கும் பெயர் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புத்தகத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பை

பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் இரண்டாவது குழந்தை ஜெஹ் க்குத் தாயானார். முதல் குழந்தை தைமூர் அலிகான். கரீனா கபூர் கர்ப்பமாக இருந்த போது தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்தும், சவால்கள் குறித்தும் `பிரக்னன்சி பைபிள்' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அப்புத்தகம் கடந்த ஜூலை 9ந்தேதி வெளியிடப்பட்டது. அதனை விற்பனை செய்ய கரீனா கபூர் சமூகவலைதளத்தில் விளம்பரம் செய்து வருகிறார்.புத்தகத்தை தனது ‘மூன்றாவது குழந்தை’ என்று கரீனா அழைத்து வருகிறார்.

இந்நிலையில், கரீனா கபூர் தான் எழுதிய புத்தகத்திற்கு வைத்திருக்கும் பெயர் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புத்தகத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மராட்டிய மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத் தலைவர் ஆசிஷ் ஷிண்டே, இது தொடர்பாக பீட் நகரில் உள்ள சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

கரீனா கபூர் மற்றும் புத்தகத்தின் இணையாசிரியர் அதிதி ஷா ஆகியோருக்கு எதிராக போலீசில் புகார் அளித்து உள்ளார். புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள வார்த்தையான பைபிள், கிறிஸ்தவர்களின் புனித நூலாக இருக்கிறது. ஆனால் கரீனா கபூர் தனது புத்தகத்திற்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சாய்நாத் கூறும் போது புகார் வந்திருப்பது உண்மைதான். ஆனால் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை. மும்பையில் இது தொடர்பாக புகார் செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Next Story