பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி


பெர்த் டெஸ்ட்:  146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
x
தினத்தந்தி 18 Dec 2018 3:37 AM GMT (Updated: 18 Dec 2018 5:17 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பெர்த்,
 
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 326 ரன்னும், இந்திய அணி 283 ரன்னும் எடுத்தன.

43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 6 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. புஜாரா (4 ரன்கள்), விராட் கோலி( 17 ரன்கள்) என முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி  2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்தது. 

இந்தியா தோல்வி

இந்த நிலையில்,  இன்று 5-வது நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி, ஸ்டார்க் பந்தில் 28 ரன்களில் வெளியேறினார். ரிஷாப் பண்ட் 30 ரன்களில் லயன் சுழலில் சிக்கினார்.  இதன்பிறகு, வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 56 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.  இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. 

Next Story