காயம் காரணமாக நாளைய போட்டியில் பிராவோ விளையாட மாட்டார் - பயிற்சியாளர் மைக் ஹசி


காயம் காரணமாக நாளைய போட்டியில் பிராவோ விளையாட மாட்டார் -  பயிற்சியாளர் மைக் ஹசி
x
தினத்தந்தி 5 April 2019 2:20 PM GMT (Updated: 5 April 2019 2:20 PM GMT)

காயம் காரணமாக நாளைய போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ விளையாட மாட்டார் என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்ட நான்கு போட்டிகளில், முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. மும்பையுடன் நடந்த நான்காவது போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த நான்கு போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்சனும் சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் குவிக்கவில்லை.

நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ராயுடு எடுத்த ரன்கள் 28, 5, 1, 0. வாட்சன் 0,44, 13, 5. இந்த தொடரில் இவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருக்கிறது. தொடர்ந்து சொதப்பி வருவதால், அணியில் மாற்றம் இருக்கும் என்று ஏற்கனவே டோனி கூறியிருந்தார். 

இந்நிலையில், பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மோதுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக முரளி விஜய்-க்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. அவருடன் டுபிளிசிஸ் களமிறக்கப்படலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி, டேவிட் வில்லே ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியுள்ள நிலையில் பிராவோவும் காயமடைந்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நிகிடிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஜ்ஜலின் சென்னை வந்துள்ளார். அவர் நேற்று அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் காயம் காரணமாக நாளைய போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ விளையாட மாட்டார். மேலும் இரண்டு வாரங்கள் பிராவோ விளையாட மாட்டார் என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருவதாகவும், இன்று அவருக்கு காயத்தின் தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story