3வது ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு


3வது ஒரு நாள் கிரிக்கெட்:  டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 11 Feb 2022 7:53 AM GMT (Updated: 11 Feb 2022 7:53 AM GMT)

3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.




ஆமதாபாத்,


இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் போராடி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது.

இந்த நிலையில், 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.  இதன்படி, கே.எல். ராகுல், தீபக் ஹூடா மற்றும் சஹால் அணியில் சேர்க்கப்படவில்லை.  அவர்களுக்கு பதில் குல்தீப், ஷ்ரேயாஸ் மற்றும் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, அகீல் உசைன் வெளியேறியுள்ளார்.  அவருக்கு பதில் ஹைடன் வால்ஷ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்திய அணி:  ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்


Next Story