7 இந்திய வீரர்களை வெஸ்ட் இண்டீசுக்குள் நுழைய விடாமல் தடுத்த அதிகாரிகள்..? பரபரப்பு தகவல்கள்


7 இந்திய வீரர்களை வெஸ்ட் இண்டீசுக்குள் நுழைய விடாமல் தடுத்த அதிகாரிகள்..? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 22 Feb 2022 11:23 PM GMT (Updated: 22 Feb 2022 11:23 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது 7 இந்திய வீரர்களை வெஸ்ட் இண்டீசுக்குள் நுழைய விடாமல் அதிகாரிகள் தடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்ெகட் போட்டியில் யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து 5-வது முறையாக மகுடம் சூடியது. 

இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி சென்ற போது கொரோனா தடுப்பூசி செலுத்தாத 7 வீரர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்த விவகாரம் இப்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய ஜூனியர் அணியின் மேலாளர் லோப்ஜாங் ஜி.டென்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீண்ட நேர விமான பயணமாக துபாயில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வழியாக வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட்ஆப் ஸ்பெயின் நகரை சென்றடைந்தோம். அங்கிருந்து கயானா கிளம்ப வேண்டி இருந்தது. ஆனால் விமான நிலையத்தில் சோதனை நடத்திய குடியேற்ற அதிகாரிகள் அணியில் கொரோனா தடுப்பூசி போடாத வேகப்பந்து வீச்சாளர்கள் ரவிகுமார், பேட்ஸ்மேன் ரகுவன்ஷி உள்பட 7 வீரர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது, அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி அறிவுறுத்தினர். 

அவர்களது வயது பிரிவினருக்கு இந்தியாவில் இன்னும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. அதனால் தான் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் கேட்கவில்லை. திரும்பி செல்வதற்கு உடனடியாக விமானம் இல்லாததால் உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுவதற்கு எங்களுக்கு வசதியாக அமைந்தது. 

இதையடுத்து வீரர்களுடனே தங்குவது என்று முடிவு செய்தேன். விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நாங்கள் தங்கினோம். இந்த விவகாரத்தால் 24 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே பரிதவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிறகு இந்திய அரசாங்கமும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தலையிட்ட பிறகுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வீரர்களுக்கு இது ஒரு மோசமான அனுபவமாக அமைந்தது.

உலக கோப்பை போட்டி தொடங்கிய போது இந்திய அணியில் பலர் கொரோனாவில் சிக்கினர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை. உரிய டாக்டரும் இல்லை. எங்களது பிசியோதெரபிஸ்ட் தான் எங்களை பாதிப்பில் இருந்து மீள உதவினார். இதற்கான நடைமுறைகள் எதுவும் சரியில்லை. அத்துடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையமும் (பயோபபுள்) திருப்திகரமாக இல்லை. 

ஓட்டலில் எங்களுக்கு என்று தனியாக ஒரு தளம் ஒதுக்கப்படவில்லை. வீரர்கள் தங்கியிருந்த அதே தளத்தில் வேறு சிலரும் இருந்தனா். அறையில் தண்ணீர் சீராக கிடைக்கவில்லை. இதே போல் சில வீரர்களுக்கு உணவு பிரச்சினையும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு சில இந்தியர்கள் நடத்தும் ஓட்டல் இருந்தது” என்று அவர் கூறினார்.

Next Story