இந்தியாவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராட்டம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 March 2022 10:41 AM GMT (Updated: 14 March 2022 10:41 AM GMT)

மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரு, 

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுக்களை இழந்து 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் எடுத்தார்.    

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில்  களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க  முடியமால் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த இலங்கை 35.5 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார்  இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதனை தொடர்ந்து இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 68.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ரிஷப் பண்ட், அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் அய்யர் 67 ரன்கள் குவித்தார். 
அதன்படி இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் கருணரத்னேவும், குசல் மெண்டிசும் அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. குசல் மெண்டிஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்தீவ்ஸ்(1), டி சில்வா(9) வந்த வேகத்தில் வெளியேறினர்.

தேநீர் இடைவேளை வரை இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் 39 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருணரத்னே 67 ரன்களுடனும், டிக்வெல்லா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அந்த அணி வெற்றிபெற இன்னும் 296 ரன்கள் தேவைப்படுவதாலும், கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதாலும், இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story