ஐ.பி.எல். 2022: பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கும் ஸ்பான்சர்ஷிப் பெருந்தொகை எவ்வளவு...?
ஐ.பி.எல். 2022ன் 15வது சீசனில் ஸ்பான்சர்ஷிப் வழியே முதன்முறையாக ரூ.1,000 கோடிக்கும் கூடுதலான வருவாயை பி.சி.சி.ஐ. ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.)
சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐ.பி.எல். போட்டிகளின் 15வது சீசன் இன்று மும்பையில் தொடங்குகிறது.
இந்த சீசனில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஸ்பான்சர்ஷிப் வழியே ரூ.1,000 கோடிக்கும் கூடுதலான வருவாயை பி.சி.சி.ஐ. ஈட்டும் என இன்சைட் ஸ்போர்ட் தெரிவித்து உள்ளது. இதுவரையிலான 15 ஐ.பி.எல். சீசன்களில் ஸ்பான்சர்ஷிப் வழியே கிடைத்த மிக பெரிய தொகை இதுவாகும்.
இந்த ஆண்டில் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடாவுடன் பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுதவிர, புதிதாக 2 ஸ்பான்சர்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, ரூபே மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆகியவற்றுடன் மேற்கொண்ட புதிய ஒப்பந்தங்கள் பற்றி ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த ஒப்பந்தம் வழியே ஆண்டொன்றுக்கு ரூ.48 முதல் ரூ.50 கோடி வருவாய் கிடைக்கும். டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வழியேயும் லாபம் கிடைக்கும். இதற்காக, டாடா நிறுவனம் ரூ.335 கோடி செலுத்தும். இது வீவோ நிறுவனம் செலுத்தும் தொகையை விட குறைவு. இதனுடன், 30 முதல் 40 சதவீதம் கூடுதல் வருவாயையும் பி.சி.சி.ஐ. ஈட்டும்.
அனைத்து பற்றாக்குறை தொகையையும் வீவோ ஏற்று கொள்ளும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
அடுத்த 2 சீசன்களுக்கு ரூ.996 கோடியை வீவோ நிறுவனம், பி.சி.சி.ஐ.க்கு வழங்க இருக்கிறது. எனினும், டாடா நிறுவனம் ரூ.670 கோடியே இந்த காலகட்டத்தில் வழங்கும். இந்த பற்றாக்குறை தொகையை வீவோ ஈடு செய்யும்.
இதுமட்டுமில்லாமல், பரிமாற்ற கட்டணம் என்ற பெயரிலும் பி.சி.சி.ஐ.க்கு, வீவோ நிறுவனம் பெருந்தொகையை செலுத்தும். இந்த தொகையானது ரூ.600 கோடிக்கும் கூடுதலாக இருக்கும்.
Related Tags :
Next Story