ஐபிஎல்: 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி..!


image courtesy: ipl twitter
x
image courtesy: ipl twitter
தினத்தந்தி 9 May 2022 6:11 PM GMT (Updated: 9 May 2022 6:11 PM GMT)

மும்பை அணி 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற  56-வது லீக் ஆட்டத்தில்  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வெங்கடேஷ் அய்யரும், ரகானேவும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். வெங்கடேஷ் அய்யர் 43, ரகானே 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் ரானா அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார். 

அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்ததால், அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய இஷான் கிஷான் 51 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Next Story