மரம் வெட்டும் தொழிலாளி கொலை: போலீஸ் தேடிய வாலிபர் கைது


மரம் வெட்டும் தொழிலாளி கொலை: போலீஸ் தேடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2016 10:15 PM GMT (Updated: 13 Dec 2016 8:52 PM GMT)

மரம் வெட்டும் தொழிலாளி கொலை: போலீஸ் தேடிய வாலிபர் கைது

கபிஸ்தலம்,

கபிஸ்தலத்தில் மரம் வெட்டும் தொழிலாளி கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

மரம் வெட்டும் தொழிலாளி

தஞ்சை மாவட்டம் கபிஸ் தலம் அருகே உள்ள விசித்திராஜபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபு(வயது36). மரம் வெட்டும் தொழிலாளி. இவரை கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ், கபிஸ்தலம் இந்திரா நகரை சேர்ந்த பிரகாஷ், நாணல்காடு பகுதியை சேர்ந்த தமிழரசன் ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் உயிருக்கு போராடிய பிரபுவை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு இறந்தார். அவர் இறக்கும் முன் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தார்.

கைது

இதன்பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராஜ், பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாணல்காடு பகுதியை சேர்ந்த தமிழரசன்(29) என்பவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கபிஸ்தலம் அரசலாற்றங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தமிழரசனை போலீசார் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story