அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை கலெக்டர் தொடங்கி வைத்தார்


அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Dec 2016 12:18 AM GMT (Updated: 16 Dec 2016 12:18 AM GMT)

அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான சர்க்கரை அரவையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான சர்க்கரை அரவையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கரும்பு அரவை


அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2016-17ம் ஆண்டிற்கான கரும்பு அரவை தொடங்கியது. நேற்று காலை 10.45 மணிக்கு ஆலையின் நிர்வாக குழு தலைவர் ராம்குமார் தலைமையில், மேலாண்மை இயக்குனர் சங்கரநாராயணன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.

விழாவில் வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், துணைத்தலைவர் மணி, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி, விவசாய சங்க பிரதிநிதிகள் நல்லமணிகாந்தி, அப்பாஸ், அழகர்சாமி, ஜெயசந்திரமணியன் உள்பட ஆலை பணியாளர்கள், தொழிலாளர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர். அலுவலக மேலாளர் சம்பத் நன்றி கூறினார்.

இலக்கு நிர்ணயம்

இந்த ஆண்டு அரவை பருவத்திற்காக 5 ஆயிரத்து 657 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலுார், தஞ்சாவூர் சர்க்கரை ஆலைகளில் இருந்து ஒரு லட்சம் டன்வரை கரும்பு அரவைக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. சராசரி சர்க்கரை கட்டுமானத்தின் அளவு 9.10 சதவீதம் வரை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 750 வழங்கப்பட்டு வருதாகவும், அதனை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டியும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னதாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நிர்வாக குழு சார்பில் மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story