பண்ருட்டி கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரம் கட்டுமான பணிகள் பிப்ரவரி மாதம் முடியும் என அதிகாரி தகவல்


பண்ருட்டி கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரம் கட்டுமான பணிகள் பிப்ரவரி மாதம் முடியும் என அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 16 Dec 2016 7:06 PM GMT)

கடலூர், பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி செலவில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகள் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய தடுப்பணை

கடலூர்,

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி செலவில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகள் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய தடுப்பணை

நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க செய்து குடிநீர் மற்றும் பாசன வசதி பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று முக்கிய ஆறுகளின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் பொதுப்பணித்துறையின்(நீர்வள ஆதாரம்) மூலம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை அமைக்க தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான கட்டுமான பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நிலத்தடி நீர் அதிகரிக்கும்

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஒரு தடுப்பணை உள்ளது. தற்போது 2-வதாக பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தேக்கி வைக்கப்படும்.

இதனால் பண்ருட்டி நகரம் மற்றும் பணிக்கன்குப்பம் அதை சுற்றியுள்ள மாளிகம்பட்டு, தாழம்பட்டு, சிறுவத்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் 3 மீட்டர் உயர வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் மொத்தம் 62 ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர் மட்டம் அதிகரிக்கும். 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது தடுப்பணை அமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 25 சதவீத பணிகளும் வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story