நாடு கடத்தப்படும் பிச்சைக்காரப் பெண்!


நாடு கடத்தப்படும் பிச்சைக்காரப் பெண்!
x
தினத்தந்தி 17 Dec 2016 10:12 AM GMT (Updated: 17 Dec 2016 10:12 AM GMT)

டென்மார்க் நாட்டில் பிச்சை எடுப்பது குற்றம் என்ற நிலையில், அங்கு பிச்சை எடுத்த ஒரு பெண்ணை முதல்முறையாக அந்நாட்டு அரசு நாடு கடத்தத் தீர்மானித்துள்ளது.

டென்மார்க் நாட்டில் பிச்சை எடுப்பது குற்றம் என்ற நிலையில், அங்கு பிச்சை எடுத்த ஒரு பெண்ணை முதல்முறையாக அந்நாட்டு அரசு நாடு கடத்தத் தீர்மானித்துள்ளது.

டென்மார்க்கில் தங்கியிருந்து பிச்சை எடுத்த குறிப்பிட்ட பெண், ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அப்பெண்ணுக்கு 40 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறை நாட்கள் முடிந்ததும் அவரை நாடு கடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த ஸ்லோவாக்கிய பெண்மணி பலமுறை டென்மார்க் தலைநகரில் பிச்சை எடுத்து வந்திருக்கிறார். இதனால் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்.

டென்மார்க் வரலாற்றிலேயே, பிச்சை எடுத்த காரணத்தால் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட அப்பெண், ஐரோப்பிய ஒன்றிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் நாடு கடத்துவது என்பது சிக்கலான விஷயம் என்றும், இதுதொடர்பாக நீதிமன்றம் கூடுதலாக ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டென்மார்க் நாட்டு குற்றவியல் சட்டப்பிரிவு 197-ன்படி, போலீசாரின் எச்சரிக்கையை மீறி பிச்சை எடுப்பது 6 மாதம் வரை சிறைத் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

பிச்சை எடுப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்ற நிலையில் பல முறை அப்பெண்மணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதை அவர் மதிக்காததாலேயே நாடு கடத்தும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story