புதுவையில், 11 மாதங்களுக்கு முன்பு மாயமான போலீஸ்காரரை கொலை செய்து உடல் எரிக்கப்பட்டது அம்பலம் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் சிக்கினர்


புதுவையில், 11 மாதங்களுக்கு முன்பு மாயமான போலீஸ்காரரை கொலை செய்து உடல் எரிக்கப்பட்டது அம்பலம் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 17 Dec 2016 10:26 PM GMT)

புதுவையில், 11 மாதங்களுக்கு முன்பு மாயமான போலீஸ்காரரை கொலை செய்து உடலை எரித்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 11 மாதங்களுக்கு முன்பு மாயம் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அருணகிரி (வயது 35). புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையில் போ

புதுச்சேரி,

புதுவையில், 11 மாதங்களுக்கு முன்பு மாயமான போலீஸ்காரரை கொலை செய்து உடலை எரித்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

11 மாதங்களுக்கு முன்பு மாயம்

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அருணகிரி (வயது 35). புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நெய்ரோஜா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 10–ந் தேதி முதல் அருணகிரி மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணகிரியை தேடிவந்தனர். ஆனால் துப்பு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தது.

இதற்கிடையே போலீஸ்காரர் அருணகிரி கடத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ., சிவா, பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

கொலை செய்யப்பட்டார்

இதனை தொடர்ந்து விசாரணையில் தீவிரம் காட்டிய போலீசார் அருணகிரியின் செல்போன் நம்பருக்கு கடைசியாக வந்த எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அருணகிரி கடலூரைச் சேர்ந்த ஒருவருடன் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கூலிப்படையை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து அருணகிரியை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்து சாம்பலை கடலில் கரைத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அருணகிரியை கொலை செய்ததற்கான காரணம் என்ன? கொலை செய்ய தூண்டியது யார்? என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story