நட்சத்திர ஆமை கடத்தல்: வேடசந்தூரை சேர்ந்தவர் உள்பட 6 பேர் கைது 4 பேருக்கு வலைவீச்சு


நட்சத்திர ஆமை கடத்தல்: வேடசந்தூரை சேர்ந்தவர் உள்பட 6 பேர் கைது 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Dec 2016 10:30 PM GMT (Updated: 18 Dec 2016 6:58 PM GMT)

பத்தினம்திட்டா அருகே நட்சத்திர ஆமையை காரில் கடத்திய வேடசந்தூரை சேர்ந்தவர் உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். நட்சத்திர ஆமை பத்தினம்திட்டா மாவட்டம் ராணி பகுதியில் நட்சத்திர ஆமை கடத்தப்படுவதாக வனத்துறையினருக

பத்தினம்திட்டா,

பத்தினம்திட்டா அருகே நட்சத்திர ஆமையை காரில் கடத்திய வேடசந்தூரை சேர்ந்தவர் உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நட்சத்திர ஆமை

பத்தினம்திட்டா மாவட்டம் ராணி பகுதியில் நட்சத்திர ஆமை கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ராணி பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து 3 கார்கள் வந்தன.

அவற்றை நிறுத்துவதற்காக அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றன. இதனால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் ஒரு காரில் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது ஒரு காரில் நட்சத்திரஆமை இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போதே கார்களில் வந்த 10 பேரில், 4 பேர் தப்பியோடி விட்டனர். 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 3 கார்களையும், நடசத்திர ஆமையையும் பறிமுதல் செய்தனர்.

6 பேர் கைது

விசாரணையில் அவர்கள் ஆலுவாவை சேர்ந்த டின்சன்கன்டோமி (வயது 34), முகமதுசுதீர் (30), கோட்டயத்தை சேர்ந்த கொச்சுமோன் (51), மலப்புரம் நிலம்பூர் பகுதியை சேர்ந்த சுதீர்பாபு (39), ஜோதிஷ்குமார் (30), தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த பாக்யராஜ் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதில், பாக்யராஜ் என்பவர் தான் நட்சத்திர ஆமையை வேடந்தூரில் இருந்து கொண்டு வந்து அதனை விற்பதற்காக முகமதுசுதீர் என்பவரை நாடியுள்ளார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து அதனை ராணி பகுதிக்கு கடத்தி சென்று விற்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய கோட்டயம் நீண்டூர் பகுதியை சேர்ந்த சுமேஷ், சுதீர்பாஸ்கர், ஹரி, ஷாஜி ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story