கரூரில், பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


கரூரில், பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 18 Dec 2016 8:47 PM GMT)

கரூரில், பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கரூர்,

கரூரில் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள வடகம்பாடி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது25). இவருக்கும் திண்டுக்கல் தோட்டனூரை சேர்ந்த பிரேம்குமாரி(21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உடலில் தீக்காயத்துடன் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்ட பிரேம்குமாரி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நேற்று மாலை உடல் பிரேத பரிசோதனை செய்யும் முன்பு, பிரேம்குமாரியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

வரதட்சணை கொடுமை

பழனிசாமி, மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி கணவரிடம் கோபித்துக்கொண்டு பிரேம்குமாரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் கடந்த 13-ந் தேதி சமாதானம் பேசி அனுப்பி வைத்தோம். பின்னர் நேற்று (நேற்று முன்தினம்) மதியம் 12.30 மணி அளவில் பிரேம்குமாரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார் என்று தகவல் கொடுத்தனர். அப்போது அங்கு சென்று பார்த்தபோது உடல் பாதி வெந்து இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். பின்னர் அன்று மாலை கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (நேற்று முன்தினம்) மாலை இறந்து விட்டார். எனவே பிரேம்குமாரியின் சாவில் மர்மம் உள்ளது எனவும் இதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார், குஜிலியம்பாறை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை கரூர்- வேலூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story