புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்


புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 18 Dec 2016 11:55 PM GMT (Updated: 18 Dec 2016 11:55 PM GMT)

புதிய உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நெல்லை மாநகர நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க ப

நெல்லை,

புதிய உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

நெல்லை மாநகர நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. நெல்லை மாநகர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தேவசேனாபதி, பொருளாளர் குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட துணை தலைவர் அருள் இளங்கோ வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க மாநில தலைவர் கணேஷ்ராம், மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ், துணை தலைவர் பிரபாகர், நெல்லை வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஜெயலலிதாவுக்கு இரங்கல்

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது. பாரம்பரிய சில்லரை வணிகத்தை சீரழிக்கும் வகையில் பல தயாரிப்பு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் சலுகைகளை சில்லரை வணிகர்களுக்கும் வழங்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் சில குறிப்பிட்ட பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவை தொடரும் பட்சத்தில் அந்த பொருட்களை வினியோகஸ்தர்கள், சில்லரை வணிகர்களும் இணைந்து புறக்கணிக்க வேண்டும்.

உரிய அனுமதி பெறாத சில நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்கள். புதிய நிறுவனங்கள் தயார் செய்யும் பொருட்கள் பற்றி, சங்கத்தில் கருத்து கேட்ட பிறகு வாங்கி விற்பனை செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்டம்

புதிய உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் ஒட்டு மொத்த வணிகர்களை பாதிக்கும் வகையில் உள்ளது. எளிமையான முறையில் வணிகர்கள் கடைபிடிக்க ஏதுவாக வழிவகை செய்யும் வரை, அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை இந்த கூட்டம் கேட்டு கொள்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கண்ணன், நட்ராஜ், அருண்குமார், பால்ராஜ், ராமையா, ராதாகிருஷ்ணன் சந்திரசேகரன், காளிதாஸ், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story