வாடும் பயிர்களை காப்பாற்ற சாஸ்தாகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


வாடும் பயிர்களை காப்பாற்ற சாஸ்தாகோவில் அணையில் இருந்து  தண்ணீர் திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 19 Dec 2016 1:07 PM GMT)

ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் வாடும் பயிர்களை காப்பாற்ற சாஸ்தா கோவில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கலெக்டர் சிவஞானத்திடம் தெற்கு தேவதானம் நகரியாறு உபவடிநிலம், பெரியகுளம்

விருதுநகர்,

ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் வாடும் பயிர்களை காப்பாற்ற சாஸ்தா கோவில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்

கலெக்டர் சிவஞானத்திடம் தெற்கு தேவதானம் நகரியாறு உபவடிநிலம், பெரியகுளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:–

தேவதானம், சாஸ்தா கோவில் நகரியாற்று தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் உழவுத் தொழிலை நம்பி மட்டுமே வாழ்கிறோம். சிறு விவசாயிகளான எங்களுக்கு கிணற்றுப் பாசன வசதி கிடையாது. ஒரு சில விவசாயிகளுக்கு கிணற்றுப் பாசன வசதி இருந்தாலும் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. விவசாயத்துக்காக கடன் வாங்கியவர்களுக்கு வட்டி கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம்.

கருகின

தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதுகுறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை ஆகிய துறைகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

எங்கள் பகுதி விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நீர் வளத்தை பெருக்க எதிர்கால திட்டம் தேவை. இப்போதைக்கு எங்கள் நெருக்கடியினை புரிந்து கொண்டு கருகிவரும் பயிர்களை காப்பாற்ற சாஸ்தா கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அதன் மூலம் தான் பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லை எனில் தற்கொலை பாதையை தவிர வேறு வழியும், விடிவும் எங்களுக்கு தெரியவில்லை. விவசாயிகளின் நிலமையை கருத்தில் கொண்டு தேவதானம், கோவிலூர், சேத்தூர், முகவூர், தளவாய்புரம் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலைமையை அரசுக்கு தெரியப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story