மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2017 10:45 PM GMT (Updated: 4 Jan 2017 8:51 PM GMT)

மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் பிரச்சினையில் மக்களுக்காக போராடிய பெண்கள், மாணவர்கள் மீது தாக்குதல் சென்னை பள்ளிக்கரனை போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களை பணி இடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

எலச்சிபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து பேசினார்கள்.

ராசிபுரம்

இதேபோல் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பகுதி செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி தொடங்கி வைத்து பேசினார். இதில் பகுதி குழு உறுப்பினர் எம்.ஜி.ராஜகோபால், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

திருச்செங்கோட்டில் அண்ணா சிலை முன்பு திருச்செங்கோடு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆதிநாராயணன், தங்கவேல் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story