மெஞ்ஞானபுரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை


மெஞ்ஞானபுரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2017 7:30 PM GMT (Updated: 5 Jan 2017 6:47 PM GMT)

மெஞ்ஞானபுரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். கிணற்றில் குதித்து தற்கொலை மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 76). இவர்களுக்கு குழந்தை கிடையாது. கடந்த சில நாட்களுக்கு ம

மெஞ்ஞானபுரம்,

மெஞ்ஞானபுரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 76). இவர்களுக்கு குழந்தை கிடையாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னுச்சாமி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் சீதாலட்சுமி தனியாக வசித்து வந்தார். கணவர் இறந்ததில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் சீதாலட்சுமி கிணற்றில் பிணமாக கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி சீதாலட்சுமியின் உடலை மீட்டனர். மெஞ்ஞானபுரம் போலீசார் அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன்தொல்லை

உடன்குடி அருகே உள்ள கந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. உடைமரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி பத்திரகாளி (42). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பத்திரகாளி கடந்த மாதம் 23–ந்தேதி வி‌ஷ கிழங்கை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

உடனே அவருக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் பத்திரகாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story