பரமக்குடியில் வீடுபுகுந்து 24 பவுன் நகைகள் திருட்டு; 2 வாலிபர்கள் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்


பரமக்குடியில் வீடுபுகுந்து 24 பவுன் நகைகள் திருட்டு; 2 வாலிபர்கள் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 3 Feb 2017 1:36 PM GMT)

பரமக்குடியில் வீடுபுகுந்து 24 பவுன் நகைகளை திருட்டுபோன வழக்கில் கண்காணிப்பு

ராமநாதபுரம்,

திருட்டு

பரமக்குடி அய்யாச்சாமி சந்து பகுதியை சேர்ந்த போஸ் என்பவருடைய மனைவி சாந்தி(வயது55). இவர் கடந்த டிசம்பர் மாதம் 25–ந் தேதி தினைக்குளத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் காலை இவருடைய வீட்டுக் கதவு உடைத்து கிடைப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாந்தி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், லேப்–டாப் உள்ளிட்டவைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருட்டு நடந்த பகுதி மற்றும் ரோடுகளில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

பறிமுதல்

இதில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது அதில் ஒரு வாலிபர் பரமக்குடி குத்துக்கல்தெரு பகுதியை சேர்ந்த பாபுஆறுமுகம்(வயது38) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்தபோது மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் நாகமணி(23) என்பவருடன் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து நாகமணியையும் கைது செய்த போலீசார் திருடிய நகைகளை மதுரையில் உள்ள நண்பரிடம் கொடுத்து வைத்திருந்ததை அறிந்து 22½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மீதம் உள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லேப்–டாப்பை விற்பனை செய்து வைத்திருந்த 10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை செய்து ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை பிடித்து கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.


Next Story