தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தல்
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்ட ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், ஊதிய நிலுவைத்தொகையை வழங்க கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்ணா போராட்டம்தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஓபிளிநாயக்கனஅள்ளி ஊராட்சி அஸ்தகிரியூர் கிராமத்தை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் திரண்டு வந்தனர்.
இவர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அங்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:–
ஊதிய நிலுவைத்தொகைஓபிளிநாயக்கனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட அஸ்தகிரியூர் பகுதியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 200–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தோம். எங்களில் பெரும்பாலானோருக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக எங்களுக்கு ஊரக வேலை உறுதி திட்ட பணியும் முறையாக வழங்கப்படவில்லை. ஏற்கனவே வறட்சி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரக வேலை உறுதிதிட்ட பணியும் கிடைக்காததால் நாங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவும், எங்களுக்கு மீண்டும் ஊரக வேலை உறுதி திட்ட பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தர்ணா போராட்டம் ½ மணி நேரம் தொடர்ந்து நடந்தது. தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.