இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்


இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 3 March 2017 10:45 PM GMT (Updated: 3 March 2017 1:18 PM GMT)

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

காவல்நீட்டிப்பு

பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற பிரகாஷ், ரூபன், கிறிஸ்டோபர், மெசி, அஸ்கர் ஆகிய 5 மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்கள் 5 பேரையும் வருகிற 17–ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பாம்பன் மீனவர்கள் 5 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 8–ந்தேதி சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று 5–வது முறையாக மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் வருகிற 17–ந்தேதி காவல்நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேலைநிறுத்தம்

இந்த நிலையில் பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க வலியுறுத்தியும் பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பாம்பனில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மீனவர்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று மீனவ சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.


Next Story