நடுவலூரில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்


நடுவலூரில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

நடுவலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காய மடைந்தனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த நடுவலூர் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அங்குள்ள மாதா கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் மதுரை, அவனியாபுரம், திருச்சி, மணப்பாறை, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

21 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க, வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, மின்விசிறி, ரூ.5 ஆயிரம் வரையிலான பணமுடிப்பு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 2 முறை வாடிவாசல் வந்து சிறப்பாக விளையாடிய 10 காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி காலை 9.30 மணியளவில் தொடங்கி மாலை 4 மணி வரை நடந்தது. போட்டியை காண தா.பழூர், கோட்டியால், சுத்தமல்லி, வி.கைகாட்டி, அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் இப்போட்டிக்கு உரிய அனுமதி இல்லாததால், மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அதிகாரிகள் தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.


Next Story