கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 302 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது


கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 302 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 10 March 2017 1:37 PM GMT)

கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு கடத்த முயன்ற 302 கிலோ ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

ரே‌ஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி பழையபேட்டை மீன் மார்க்கெட் அருகில் இருந்து காரில் ஆந்திர மாநிலத்திற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை தனி தாசில்தார் கோவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய தலைமையில், தனி வருவாய் ஆய்வாளர் சந்திரன் மற்றும் டிரைவர் முருகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நின்ற ஒரு காரை சோதனை செய்த போது உள்ளே 6 மூட்டைகளில் 302 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த போத்திநாயக்கனூரைச் சேர்ந்த முகமதுசெரீப் (வயது 35) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த ரே‌ஷன் அரிசி கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

டிரைவர் கைது

இதைத் தொடர்ந்து முகமது செரீப்பை அதிகாரிகள் கைது செய்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ரே‌ஷன் அரிசியும், அதை கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story