காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக உதவியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக உதவியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 March 2017 10:09 PM GMT (Updated: 11 March 2017 10:09 PM GMT)

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திருவாரூரில் நடந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலக உதவியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் கிழக்கு மண்டல செயலாளர் சந்தானதேவன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் ராவணன், மாநில தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் வாசுதேவன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

காலமுறை ஊதியம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கீழ்நிலை பணியாளர்களாக இருந்து பதவி உயர்வு பெற்ற அலுவலக உதவியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒரு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் முன்னுரிமை கொடுத்த நியமிக்க வேண்டும். காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களின் பணியினை நிரந்தரம் செய்திட வேண்டும். 7–வது ஊதியக்குழுவை காலம் கடத்தாமல் தமிழக அரசு உடன் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொருளாளர் அசோக்குமார், நாகை மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, தஞ்சை மாவட்ட தலைவர் முருகானந்தம், திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் சிவானந்தம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன் வரவேற்றார். முடிவில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story