காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 3–வது நாளாக விவசாயிகள் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 3–வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 30 March 2017 8:58 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 3–வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடை செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கடந்த 28–ந் தேதி முதல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாகவும் நீடித்தது.

திரைப்பட இயக்குனர் பங்கேற்பு


போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரை, தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியேன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன், தமிழக உழவர் முன்னணி துணைத்தலைவர் தமிழ்மணி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் கலந்து கொண்டார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் குருமூர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுங்கள். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என கூறினர்.

போலீஸ் குவிப்பு


அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாங்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் ஓரமாக அறவழியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். போக்குவரத்துக்கு இடையூறு என்றால் நீங்களே ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். அங்கு அமர்ந்து போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து அங்கு போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story