சேதுபாவாசத்திரம் அருகே இறந்து கரை ஒதுங்கிய கடல்பசு


சேதுபாவாசத்திரம் அருகே இறந்து கரை ஒதுங்கிய கடல்பசு
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 1 April 2017 8:40 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே கடல்பசு இறந்து கரை ஒதுங்கியது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் அரிய வகை உயிரினமான கடல்பசுக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவற்றை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த பகுதியில் கடல்பசுக்கள் மீனவர்கள் வலையில் அடிக்கடி சிக்குகின்றன. அவ்வாறு சிக்கும் கடல்பசுக்களை மீண்டும் கடலிலேயே விட வேண்டும் என மீனவர்களை, வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் வனத்துறை சார்பில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கடல் பகுதியில் கடல் பசுக்களின் உணவான, கடல் தாழைகளை (ஒரு வகை கடல் தாவரம்) வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடக்கம் செய்யப்பட்டது

இந்த நிலையில் நேற்று சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அடைக்கத்தேவன் மீன்பிடி துறைமுகத்தில் கடல்பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது 7 அடி நீளமும், ஒரு டன் எடையும் இருந்தது. இதுகுறித்து மீன்வளத்துறை, வனத்துறை, கடலோர காவல் குழும அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மீன்வளத்துறை ஆய்வாளர் தியாகராஜன், வனத்துறை ஆய்வாளர் மோகன், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த கடல்பசுவை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடல்பசு, பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல்பசுவை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர். 

Next Story