மானாமதுரை அருகே பெண் போலீஸ் மர்மச்சாவு உதவி கலெக்டர் விசாரணை


மானாமதுரை அருகே பெண் போலீஸ் மர்மச்சாவு உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 6 April 2017 11:15 PM GMT (Updated: 6 April 2017 1:06 PM GMT)

மானாமதுரை அருகே பெண் போலீஸ் மர்மமான முறையில் இறந்தார்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் சர்மிளாதேவி(வயது 24). இவர் தனது உறவினரான இதே ஊரைச் சேர்ந்த வீரராகவன்(30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் விகாஷ் என்ற மகன் உள்ளான். வீரராகவன் தற்போது ஒடிசா மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

சர்மிளாதேவி, புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சர்மிளாதேவி விடுப்பில் தனது சொந்த கிராமமான கட்டிக்குளத்திற்கு வந்தார். அப்போது, அவரது கணவர் வீரராகவனும் விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார்.

மயங்கி விழுந்தார்

இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரின் பெற்றோரும் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சர்மிளாதேவி தனது வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சர்மிளாதேவியை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், சர்மிளாதேவி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து சர்மிளாதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மர்மம் இருப்பதாக புகார்

சர்மிளாதேவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு பிரச்சினையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

சர்மிளாதேவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்மிளாதேவியின் மரணம் குறித்து சிவகங்கை உதவி கலெக்டர் சுந்தரபாண்டியும் விசாரணை நடத்தினார்.


Next Story