ஏற்கனவே இருந்த விதிகளை பின்பற்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் பயிர்க்கடன் கலெக்டர் தகவல்


ஏற்கனவே இருந்த விதிகளை பின்பற்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் பயிர்க்கடன் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 1:07 PM GMT)

ஏற்கனவே இருந்த விதிகளை பின்பற்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மீண்டும் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது

சிவகங்கை,

மத்திய அரசு ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை கடந்த 9.11.2016 முதல் செல்லாது என்று அறிவித்தது. இதைதொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், உறுப்பினர்களிடம் இருந்து உயர் மதிப்பு நோட்டுகளை பெறுவதற்கும், மாற்றிக் கொள்வதற்கும் அனுமதிக்காததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ஏதுவாக அரசு வழிகாட்டுதலின்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலம் உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் அனுமதித்தது.

மீண்டும் பயிர்க்கடன்

அதாவது, சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயரில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு உட்பட்டு பயிர்க்கடன் வழங்கப்பட்டது.

தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி 13.3.2017 முதல் உச்ச வரம்பினை முற்றிலும் தளர்த்தியதன் காரணமாக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1–ந் தேதி முதல் விவசாயிகளுக்கு, தற்போது உறுப்பினராக உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலேயே 9.11.2016–க்கு முன்னர் நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் விவசாய பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story