1,318 மாணவிகளுக்கு பட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்


1,318 மாணவிகளுக்கு பட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்
x
தினத்தந்தி 6 April 2017 10:30 PM GMT (Updated: 6 April 2017 8:35 PM GMT)

மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் 1,318 மாணவிகளுக்கு பட்டங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துகுமார் வழங்கினார்.

மன்னார்குடி,

மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் 20-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் வி.திவாகரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எஸ்.அமுதா, கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை இயக்குனர் சரவணமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 148 மாணவிகள் உள்பட 1,318 பேருக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.எம்.முத்துகுமார் பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இப்பகுதியில் உள்ள கிராம பெண்களுக்கு தரமான உயர்கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என்ற கல்லூரி நிர்வாகத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளதை இன்று கண்கூடாக பார்க்கிறேன். பெண்களுக்கு கல்வி கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சுதந்திரமும் கொடுக்கவேண்டும் அப்போது தான் சமூக முன்னேற்றம் சாத்தியப்படும். வாழக்கையில் ஒரு லட்சியத்தை உருவாக்கி அதை அடைய போராடவேண்டும். ஒன்றை தொடங்குவதில் வெற்றி அடங்கியிருப்பதில்லை அதை தொடர்ந்து செயல்படுத்துவதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கல்லூரி துணை முதல்வர் கந்தவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கு.சீனிவாசன், திருவாரூர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், டாக்டர் அசோக்குமார், தரணி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி இயக்குனர் சேதுராமன், கல்லூரி அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

Next Story