பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் சி.எஸ்.டி. – பன்வெல் இடையே ரெயில் சேவை ரத்து


பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் சி.எஸ்.டி. – பன்வெல் இடையே ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 29 April 2017 10:02 PM GMT (Updated: 29 April 2017 10:01 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.டி. – பன்வெல் இடையே ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்யாண் – தானே

மத்திய ரெயில்வே வழித்தடமான கல்யாண் – தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே காலை 10.47 மணி முதல் மாலை 4.14 மணி வரை கல்யாணில் இருந்து புறப்படும் ஸ்லோ, செமி பாஸ்ட் ரெயில்கள் கல்யாண் – முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். எனவே இந்த ரெயில்கள் பிளாட்பார வசதி இல்லாத தாக்குர்லி, கோபர், மும்ரா, கல்வா ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. மேற்கூறப்பட்ட ரெயில் நிலையங்களுக்கு பயணிகள் தானே, திவா, டோம்பிவிலியில் இருந்து கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்களில் செல்லலாம்.

ரெயில் சேவை ரத்து

துறைமுக வழித்தடத்தில் குர்லா – வாஷி இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.37 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷிக்கும், காலை 10.20 மணி முதல் பிற்பகல் 3.48 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.டி.க்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் சி.எஸ்.டி. – குர்லா, வாஷி – பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே

மேற்கு ரெயில்வேயில் ஜோகேஸ்வரி ரெயில்நிலைய ஸ்லோ பிளாட்பாரத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே விரார் நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் அந்தேரி – கோரேகாவ் இடைய விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் ராம்மந்திர் ரெயில் நிலையத்தில் நிற்காது. பராமரிப்பு பணியையொட்டி சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story