வாட்டாத்திகோட்டை கொல்லைக்காடு மதுக்கடையை மூடக்கோரி தாசில்தார் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை பட்டுக்கோட்டையில் நடந்தது


வாட்டாத்திகோட்டை கொல்லைக்காடு மதுக்கடையை மூடக்கோரி தாசில்தார் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை பட்டுக்கோட்டையில் நடந்தது
x
தினத்தந்தி 13 May 2017 5:05 PM GMT (Updated: 13 May 2017 5:04 PM GMT)

வாட்டாத்திகோட்டை கொல்லைக்காடு மதுக்கடையை மூடக்கோரி பட்டுக்கோட்டையில் தாசில்தார் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டாத்தி கோட்டை கொல்லைக்காடு கிராமத்தில் கடைத்தெருவில் மதுக்கடை இயங்கி வருகிறது. இதனால் வ

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை தாலுகா வாட்டாத்தி கோட்டை கொல்லைக்காடு கிராமத்தில் கடைத்தெருவில் மதுக்கடை இயங்கி வருகிறது. இதனால் வாட்டாத்திகோட்டை கொல்லைக்காடு, பூவாளூர், இடையாத்தி ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள், பொதுமக்கள் மேற்கூறிய மதுக்கடையை உடனே மூடக்கோரி சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனால் வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு போலீசார், பட்டுக்கோட்டையில் தாசில்தார் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடத்தி பேசி முடிவு செய்யலாம் என்றனர். அதன்பேரில் சமாதான கூட்டத்திற்கு நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வரததால் காலையில் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக கூறி, 500–க்கும் மேற்பட்டோர் திடீரென பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உடனடியாக வாட்டாத்தி கோட்டை கொல்லைக்காடு கிராமத்தில் இயங்கி வரும் மதுக்கடையை மூடவேண்டும். இல்லை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து கடையை அடித்து நொறுக்குவோம் என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து டாஸ்மாக் உதவி மேலாளர் ராஜசேகரன், கோட்ட கலால் அலுவலர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் 20 நாட்களுக்குள் வாட்டாத்திகோட்டை கொல்லைக்காட்டில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story