கள்ளக்காதல் தகராறில் பெண் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


கள்ளக்காதல் தகராறில் பெண் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 17 May 2017 11:00 PM GMT (Updated: 17 May 2017 7:05 PM GMT)

கள்ளக்காதல் தகராறில் பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர்,

திட்டக்குடி அருகே கூடலூர் காலனி ஓம்சக்திகோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி செல்வராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வராணி கூலி வேலைக்கு சென்று வந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த உறவினர் ராமசாமி மகன் தொழிலாளி கருணாமூர்த்தி (23) என்பவரும் அவ்வப்போது வேலைக்கு சென்று வந்தார்.

இதனால் செல்வராணியும், கருணாமூர்த்தியும் நெருங்கி பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். செல்வராணியை தேடி கருணாமூர்த்தி அடிக்கடி அவருடைய வீட்டுக்கு சென்று வந்தார். இதை அறிந்ததும் அவருடைய கணவர் பிரகாஷ் மற்றும் ஊரில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

கொலை

இதையடுத்து செல்வராணி கருணாமூர்த்தியிடம் பேசாமல் இருந்து வந்தார். கடந்த 18-4-2015 அன்று இரவு 11 மணி அளவில் செல்வராணி வீட்டுக்கு கருணாமூர்த்தி சென்றார். அங்கு செல்வராணி தன்னுடைய 2 குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். உடன் செல்வராணியை அவர் எழுப்பி, என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என்று கேட்டு தகராறு செய்தார். இதையடுத்து 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருணாமூர்த்தி செல்வராணியை தாக்கினார். சத்தம் கேட்டதும் தூங்கிக்கொண்டிருந்த செல்வராணியின் 9 வயதான மூத்த மகள் எழுந்து, கருணாமூர்த்தியை தட்டிக்கேட்டாள். உடன் அந்த குழந்தையை நீ தூங்காவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அதையடுத்து அந்த குழந்தை வேறு அறைக்கு சென்று விட்டது.

உடன் செல்வராணியை கருணாமூர்த்தி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுத்ததால் மீண்டும் அவரை தாக்கினார். இதில் மயங்கி கட்டிலில் விழுந்த செல்வராணியை தலையணையால் அமுக்கி கருணாமூர்த்தி கொலை செய்தார். பின்னர் தலையணை, செல்வராணியின் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர் தலைமறைவாகி விட்டார்.

ஆயுள் தண்டனை

மறுநாள் காலை நடந்த விவரத்தை செல்வராணியின் மூத்த மகள் தன்னுடைய மாமா செந்திலிடம் கூறினாள். அதன்பேரில் ஆவினங்குடி போலீசில் செந்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார்.

தனது தீர்ப்பில், இவ் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கருணாமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பவானி ஆஜராகி வாதாடினார். 

Next Story