டாக்கியார்டுரோடு– ரேரோடு இடையே தண்டவாளத்தில் விரிசல் ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி


டாக்கியார்டுரோடு– ரேரோடு இடையே தண்டவாளத்தில் விரிசல் ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி
x
தினத்தந்தி 30 May 2017 10:27 PM GMT (Updated: 30 May 2017 10:27 PM GMT)

துறைமுக வழித்தடத்தில் டாக்கியார்டுரோடு– ரேரோடு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் உள்ள டாக்கியார்டுரோடு–ரேரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மேம்பாலத்தின் கீழே நேற்று பிற்பகல் 2 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த மின்சார ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதற்கிடையே தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ரெயில் சேவை பாதிப்பு

அப்போது விரிசல் ஏற்பட்ட தண்டவாளம் சுமார் 1 அடி நீளத்திற்கு உடைந்து கிடந்தது. இதையடுத்து தண்டவாளத்தை மாற்றும் பணியில் ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டனர். இதற்கிடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில்களில் இருந்த பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர். அவர்கள் ரெயில்களில் இருந்து இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ், ஆட்டோ பிடித்து சென்றனர்.

மேலும் ரெயில் சேவை பாதிப்பின் காரணமாக ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில், 1 மணி நேரத்திற்கு பிறகு தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. இதன்பின்னர் அந்த வழியாக ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.


Next Story